ஜூன், 2019 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூன் 2019

புதிய பார்வை தேவை

“வெறுமனே பச்சைபசேலென்று மங்கலாக ஒரு உருவத்தைப் பார்ப்பதைவிட மரத்தையும் அதன் ஒவ்வொரு இலைகளையும் பார்ப்பது அற்புதமாக இருக்கும்” என்று என் அப்பா சொன்னார். அது எவ்வளவு உண்மையென்பது எனக்குத் தெரியும். அப்போது எனக்கு பதினெட்டு வயது; புதிதாக கண்ணாடி அணிந்திருந்தேன், அது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொன்றையும் ஒரு புதிய விதத்தில் பார்க்கமுடிந்தது; மங்கலாகக் தெரிந்தவை எல்லாம் தெளிவாக அழகாகத் தெரிந்தன!

கண்ணாடி அணியாமல் மரங்களைப் பார்ப்பதுபோலத்தான் சிலசமயங்களில் வேதாகமத்தின் சில புத்தகங்களை வாசிக்கும்போதும் உணர்கிறேன். அவற்றில் அறிந்துகொள்வதற்கு அதிகம் இல்லாததுபோலத் தோன்றுகிறது. ஆனால் சலிப்பூட்டுவதுபோலத் தெரிகிற வசனங்களில் உள்ள விபரங்களைக் கவனிக்கும்போது, ஆச்சரியமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.

யாத்திராகமப் புத்தகத்தை வாசிக்கும்போது இத்தகைய அனுபவத்தைப் பெற்றேன். இஸ்ரவேலர் மத்தியில் தாம் வாசஞ்செய்வதற்கு தற்காலிகமாக ஆசரிப்புக்கூடாரம் ஒன்றை தேவன் கட்டச்சொல்கிறார். அதன் கட்டுமான விவரங்களைச் சொல்லுகிறார். அதை வாசிக்கும்போது சற்று சலிப்புத் தட்டுகிறது. 25ம் அதிகாரத்தில் குத்துவிளக்கு குறித்த விவரங்களை தேவன் கொடுக்கிறார். அதை சற்று ஆராய்ந்து பார்த்தேன். அதன் தண்டு, கிளைகள், மொக்குகள், பழங்கள், பூக்கள் அனைத்தையும் ‘பசும்பொன்னினால்’ அடிப்புவேலையாய்ச் செய்யச் சொல்லுகிறார். வச 31. அதன் கிண்ணங்கள் “வாதுமை பூக்களை” போல இருக்கவேண்டுமாம். வச 34.

வாதுமை மரங்கள் அற்புதமானவை. அதே இயற்கை அழகு தம்முடைய ஆசரிப்புக்கூடாரத்திலும் காணப்பட தேவன் சொன்னார்!

“காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்” என்று பவுல் எழுதினார். ரோமர் 1:20. தேவனுடைய அழகைக் காண சிலசமயங்களில் சிருஷ்டிப்பையும், சலிப்புத்தட்டுகிற சில வசனங்களையும் புதிய பார்வையோடு பார்க்கவேண்டும்.

சுறாக்களும்கூட கடிக்காமல் இருக்கலாம்

விடுமுறை சயமத்தில் என் பிள்ளைகளை ஒரு நீர்வாழ் காட்சிசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்கள் சந்தோஷமாக விளையாடினார்கள், எனக்கு சற்று
கவலையிலிருந்தது. அங்கு விசேஷமாகச் செய்யப்பட்டிருக்கும் தொட்டிகளில் உள்ள சிறிய சுறாக்களிடம் மக்கள் விளையாடலாம். அங்கிருந்த உதவியாளரிடம், அந்தச் சுறாக்கள் எப்போதாவது யாருடைய விரலையாவது கடித்திருக்கின்றனவா என்று கேட்டேன். சுறாக்களுக்கு சற்றுமுன்னரே இரையளித்திருப்பதாகவும், அதுவும் கூடுதலாக இரை கொடுத்திருப்பதாகவும் கூறினார். அவற்றிற்கு பசி இருக்காது என்பதால் கடிக்காது என்றார்.

சுறாக்களுடன் பழகுவது குறித்து நான் கற்றுக்கொண்டதை ஒரு நீதிமொழியும் நினைவூட்டுகிறது: “திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.” நீதி 27:7. பசியானது, அதாவது உள்ளுக்குள் வெறுமையாக இருப்பதுபோன்ற உணர்வானது, நாம் தீர்மானங்களைச் செய்யும்போது நம்முடைய பகுத்தறிவை மழுங்கச்செய்யலாம். அந்த வெறுமையைப் போக்க எதையும் செய்வதற்கு அது நம்மைச் சம்மதிக்கவைக்கிறது, ஏன் அடுத்தவருக்கு அது பாதிப்பையே உண்டாக்கினாலும் செய்யவைக்கிறது.

பசிகள் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த தேவன் விரும்புவதில்லை. கிறிஸ்துவின் அன்பு நம்மில் நிறைந்திருக்க அவர் விரும்புகிறார், அப்போதுதான் நாம் செய்கிற ஒவ்வொன்றிற்கும் அவர் தருகிற சமாதானமும் உறுதியும் அடித்தளமாக இருக்கும். தேவன் நம்மேல் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறார் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கும்போது, நம்மில் நம்பிக்கை உண்டாகும். சாதனைகள், உடைமைகள், உறவுகள் போன்ற வாழ்க்கையின் “இனிமையான” விஷயங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க அது நம்மைப் பெலப்படுத்தும்.

இயேசுவோடான உறவு மட்டுமே நமக்கு மெய்யான நிம்மதியைக் கொடுக்கிறது. தேவன் நம்மேல் காட்டுகிற ஈடுஇணையற்ற அன்பை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் “தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்பட” முடியும். எபேசியர் 3:19.

வழிகளை மாற்றும் தேவன்

மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய தேவன் நமக்கு ஒரு வாசலைத் திறந்திக்கிறார் என்று உணர்ந்தாலும், அந்தச் சமயத்தில் 'வேண்டாம்," அல்லது 'இப்போது வேண்டாம்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? என்னுடைய ஊழியக்காலத்தின் ஆரம்பத்தில் இரண்டு வாய்ப்புகள் எனக்கு வந்தன் இரண்டுமே என்னுடைய திறமைகள், வரங்கள் மூலம் சபையின் தேவைகளைச் சந்திப்பதற்கேற்ற வாய்ப்புகள்தாம். ஆனால், கடைசியில் இரண்டு வாசல்களுமே அடைபட்டன. இந்த ஏமாற்றமான

அனுபவங்களுக்கு பிறகு, இன்னொரு பொறுப்பு தேடி வந்தது; அதற்கு நான் தேர்வுசெய்யப்பட்டேன். அந்த ஊழிய அழைப்புமூலம் வாழ்க்கையை மாற்றத்தக்க ஊழியங்களை பதின்மூன்று வருடங்கள் செய்ய முடிந்தது.

அப்போஸ்தலர் 16ல், பவுலையும் அவரோடு இருந்தவர்களையும் இரண்டுமுறை தேவன் தடைசெய்து, வேறுபக்கம் அனுப்புகிறார். முதலாவது அவர்கள், 'ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டார்கள்" (வச. 6). பிறகு அவர்கள், 'மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்" (வச. 7). தம்முடைய ஊழியத்திற்கும், ஊழியக்

காரர்களுக்கும் எது சரியாக இருக்கும் என்பது தேவனுக்குத் தெரியும், அது அவர்களுக்குத் தெரியாது. முந்தின திட்டங்களை தேவன் தடைசெய்ததால்தான், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்கமுடிந்தது, தேவனுடைய உறுதியான வழிநடத்துதலைப் பெறமுடிந்தது (வச. 9-10).

இது உண்மையிலேயே பெரிய இழப்புதான் என்கிற எண்ணம் முதலில் வந்ததுமே யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் போகும்போதும், செய்த வேலைக்கு போதுமான வருமானம் கிடைக்காதபோதும், வேறிடத்திற்கு மாறவேண்டும் என்கிற எண்ணம் தடைபடும்போதும் பெரிய வேதனையாக இருக்கும். இத்தகைய விஷயங்கள் அந்த நேரத்தில் நமக்கு அதிக மனப்பாரத்தைக் கொடுக்கலாம்;. ஆனால், அவை உண்மையிலேயே தேவன் மாற்றிவிட்ட பாதைகள் என்பதும், தாம் விரும்புகிற இடத்தில் நம்மை வைப்பதற்கு தேவன் கிருபையாகக் கையாண்ட வழிகள் என்பதும் பிறகுதான் தெரியவரும்; அப்போது நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம்.

கயிற்றை அவிழ்த்துவிடுங்கள்

மன்னிப்பதால் கிடைக்கிற சுகத்தை எல்லாரும் அறிந்துகொள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் முயன்று வருகிறார்கள். அந்த ஊழியத்தின் ஒரு பகுதியாக குறுநாடகம் ஒன்றை நடத்துவார்கள். அதில், தவறுசெய்த ஒருவரையும் அவரால் பாதிக்கப்பட்டவரையும் முதுகோடு முதுகாகச் சேர்த்துக் கட்டிவிடுவார்கள். அந்தக் கட்டிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்தான் கட்டை அவிழ்க்கவேண்டும். அவர் எவ்வளவுதான் முயன்றாலும் கட்டை அவிழ்க்க முடியாது; கட்டை அவிழ்க்காமல் தப்பிக்கவும் முடியாது.

தாங்கள் தவறுசெய்துவிட்டதாக ஒருவர் நம்மிடம் வந்து வருத்தம் தெரிவிக்கும்போது, அவரை மன்னிக்கவேண்டும். அப்போதுதான் நாம் அனுபவித்த வேதனை, கசப்பிலிருந்து நம்மையும் நம்மைப் பாடுபடுத்தியவரையும் விடுவித்துவிட முடியும். ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபு ஏமாற்றி வாங்கிவிட்டார், அதன்பிறகு இரு சகோதரர்களும் இருபது வருடங்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இந்தச் சம்பவத்தை ஆதியாகமத்தில் வாசிக்கலாம். பல வருடங்கள் கடந்த நிலையில், பிதாக்களுடைய தேசத்திற்குத் திரும்பிச்செல்லும்படி யாக்கோபிடம் தேவன் கூறுகிறார். ஆதி 31:3. யாக்கோபு உடனே கீழ்ப்படிந்தார்; ஆனால், அதற்கு முன்னரே ஏராளமான மிருக ஜீவன்களை வெகுமானமாக ஏசாவுக்கு அனுப்பிவைக்கிறார். ஆதி 32:13-15. சகோதரர்கள் இருவரும் சந்தித்த போது, ஏழுவிசை தன் சகோதரனை குனிந்து, வணங்குகிறார். ஆதி 33:3. ஏசா ஓடிச்சென்று, தன் சகோதரனைக் கட்டியணைக்கிறார்; மீண்டும் சேர்ந்ததை எண்ணி, இருவரும் அழுகிறார்கள் (வச. 4). தன் சகோதரனுக்கு விரோதமாக தான் செய்த பாவத்தின் பிடியிலிருந்து இப்போது யாக்கோபு விடுவிக்கப்பட்டார்.

மன்னிப்பு வழங்கமுடியாமல் சிறைபட்டிருக்கிறீர்களா? கோபத்தையும் பயத்தையும் அல்லது அவமானத்தையும் அகற்றமுடியாமல் தவிக்கிறீர்களா? நீங்கள் உதவிகேட்டால், தேவன் தம்முடைய குமாரன் மூலமாகவும் ஆவியானவர் மூலமாகவும் உங்களை விடுவிப்பார். எப்படிப்பட்ட கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும் கட்டை அவிழ்ப்பதற்கான செயல்முறையைத் துவங்குவதற்கு அவர் பெலன் தருவார்; அப்போது நீங்கள் விடுதலைபெறலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பான தலைமைத்துவம்

ஒரு தாய் கரடி தன்னுடைய நான்கு குட்டிகளையும் தூக்கிக்கொண்டு மனிதர்கள் நடமாடும் வீதியில் வலம்வந்த காணொலியை பார்த்தது என் முகத்தில் புன்னகையை வருவித்தது. அது தன் ஒவ்வொரு குட்டிகளையும் சாலையின் மறுபுறம் கொண்டு செல்வதும், அவைகள் மீண்டும் திரும்பி வருவதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அந்த தாய் கரடி, ஒரு கட்டத்தில் தன் நான்கு குட்டிகளையும் ஒருசேர தூக்கிக்கொண்டு ஒரேயடியாய் சாலையை பாதுகாப்புடன் கடந்தது.  
ஒரு தாயின் சலிப்படையாத இந்த செய்கையை காண்பிக்கும் இந்த காணொலியானது, தெசலோனிக்கேய திருச்சபை விசுவாசிகள் மீது பவுல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க பவுல் பயன்படுத்திய உருவகத்தோடு ஒத்துப்போகிறது. அவருடைய அதிகாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய வேலையை தன்னுடைய இளம் குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:7,11). தெசலோனிக்கேய மக்கள் மீதான இந்த ஆழமான அன்பே (வச. 8), பவுல் அப்போஸ்தலரை உற்சாகப்படுத்தி, தேற்றி, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழச் செய்தது (வச. 12). தெய்வீக வாழ்க்கைக்கான இந்த உணர்ச்சிபூர்வமான அழைப்பு, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனை கனப்படுத்துவதை பார்க்கவேண்டும் என்ற அவரது அன்பான விருப்பத்தின் விளைவாகும்.  
நமது தலைமைத்துவ வாய்ப்புகள் அனைத்திலும், அதிலும் குறிப்பாக பொறுப்புகள் நம்மை சோர்வடையச் செய்யும் போது பவுலின் இந்த உதாரணம் நமக்கு வழிகாட்டியாக அமையும். கர்த்தருடைய ஆவியானவராலே நடத்தப்பட்டு, நம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் இருப்பவர்களை மென்மையாகவும் உறுதியாகவும் நேசித்து வழிநடத்துவோம்.

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.